பிரபஞ்ச நியதிகள் – அறிமுகம்
அஞ்சாமையும் கெஞ்சாமையும் குடிகொண்டிருந்த என் மனதில், இன்று இயலாமை வந்து குடிகொண்டது ஏன்?
தவறான ஆசிரியனின் குறைகளை சுட்டிக் காட்ட இயலாமை, லஞ்சம் வாங்கும் பெரியவரைச் சுட்டிக்காட்ட இயலாமை, ராமன் தவறானவன் என்றும் ராவணன் சரியானவன் என்றும் சொல்ல இயலாமை. இதற்கெல்லாம் காரணம் அறியாமையா? இல்லை புரியாமையா? இந்த உலகம் ஏதோ ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறது என நானறிவேன் ஆனால் அது எது என்பது இன்றுவரை என்ன என்பதுதான் எனக்கு புரியாமல் இருக்கிறது! நான் வழிகாட்டுகிறேன், நான் சக்திவாய்ந்தவன் என்று பலர் சொன்னாலும் பகுத்தறிவு அதை ஏற்பதாய் இல்லை. மாறாக அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை அதேபோல் நான் அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை.
இந்தப் பதிவை எழுத முன் ஒரு சிறிய தகவல். நான் எந்த மதத்திற்கும், எந்த இனத்திற்கும் எதிரானவன் இல்லை. நான் நாத்திகன் இல்லை, அதே வேளை 100% ஆத்திகனும் இல்லை. ஒரு கொள்கை அடிப்படையில் என்னை விட மேலான சக்திகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்ளகிறேன் அதற்கு கடவுள் என்று பேர் வைத்தால் அதையும் ஏற்கிறேன்! இந்த பிரபஞ்சம் தாக்கத்திற்கு சமனான மறுதாக்கத்துடன் இயங்கி வருகிறது. இதை எனக்கு எட்டாம் ஆண்டில் ஆசிரியை திருமதி ஸ்ரீதரன் கற்பித்ததாய் ஞாபகம் பல காரணங்களுக்காக நான் அப்போது படிப்பில் சிங்கமாய் இருந்தவன். சிங்கம் என்று சொல்லாவிட்டாலும் அசிங்கமாய் இருக்கவில்லை. ஆனால் இன்று தீமை செய்பவன் யோக்கியன் போலவும் நன்மை செய்பவன் நாய்படாப் பாடு படும் போதும் இந்தத் தத்துவமே பொய்தானோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. இந்தப் பதிவு பிரபஞ்ச நியதிகள் தொடர்பான என் பார்வை அல்ல உங்களின் கருத்துக்களும் வந்து போகவேண்டும். இந்தப் பதிவின் தொடர்ச்சியில் பல அற்புதமான விடயங்களை சொல்ல இருக்கிறேன் தயவு செய்து அற்புதம் என்ற ஒரே காரணத்துக்காக என்னை உங்கள் பூஜை அறையில் வைத்து விட வேண்டாம். உங்கள் பூஜை அறைகளை அலங்கரிக்கும் தகுதி எனக்கு இல்லை. நம் பலருக்குள் தனித்துவமான தன்மைகள் உண்டு. பிறக்கும் போது தனித்துவமான கைரேகைகளுடன் பிறந்து இந்த உலகிற்கு நாம் இதை அறிவிக்கிறோம், இருந்தாலும் காலம் செல்லச்செல்ல நான் எம் தனித்துவத்தை வழிகாட்டல் என்னும் மாயைக்குள் நுழைந்து இழந்துவிடுகிறோம். வைரமுத்தன் சொன்னது போல “தப்புத் தப்பாய் பேசும் போது சரியாய் சொன்ன மனிதன் சரியாகப் பேசும்போது தப்பாக சொல்றானே” என்றுதான் நம் நிலை இருக்கிறது. பெரியார் மறைந்த பின்னும் மறையாத ஜாதிகள், மார்டின் லூதர் மரித்த பின்னும் மரிக்காத வன்முறைகள், பார்பருக்கு இந்தியாவில் அடிவிழுந்த போது கைகட்டி வேடிக்கை பார்த்த ராமர், அதை ஏவிவிட்ட பலர் இன்னும் நான் சொல்ல நினைக்கின்ற ஆனால் சொல்ல முடியாத எத்தனையோ விடயங்கள்.
இந்த தொடர்ப் பதிவே எனக்குள் எழும் கேள்விகள்தான். தெளிவான பதில்கள் இருந்தால் தாருங்கள். தாமஸ் அல்வா எடிசன் கண்டுபிடித்த இத்தனை கண்டுபிடிப்புக்களும் அவர் வாங்கி வந்த வரத்தின் அதிஷ்டமா? இல்லை அவரின் விடாமுயற்சியின் பலனா? பில் கேட்ஸ்இன் உயர்வுக்கு காரணம் கர்மாவா? உழைப்பா? பெரியவர்கள் எது சொன்னாலும் சரியா? சிறியவர்கள் அதைக் கேட்காவிட்டால் பாவமா? ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தது “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொன்னாதாலா? கமலுக்கு ஆஸ்கார் கிடைக்காதது “கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்” என்று சொன்னதாலா? அலசுகிறேன் உங்கள் ஆதரவு உள்ளவரை அலசப் போகிறேன். இதை எழுதும் போது என் மனதில் இருபது அத்தியாயங்கள் தோன்றிவிட்டன அவை எழுபது ஆவதும் இத்துடன் முடிவதும் உங்கள் கையிலே!
எழுமின் ! விழுமின் ! குறிசாரும் வரை நில்லாது செல்மின்


எனக்கு நானே கடவுள், என்னை நானே தீர்மானிக்கின்றேன் என்று எவன் நினைக்கிறான், கஞ்சா சாமி சொன்னது வேதம் அவர்ட பொஞ்சாதி பேசினது பொன்மொழி என்று போதைபக்தி முத்தி அலையிற இந்த மூடர்கள் எப்போதுதான் தமக்கே உரிய தனித்துவம் பற்றி எண்ணப் போகின்றார்களோ??
//இன்று தீமை செய்பவன் யோக்கியன் போலவும் நன்மை செய்பவன் நாய்படாப் பாடு படும் போதும்//
எதனாலங்குற கேள்வி எனக்குள்ளும் இருக்கு…….
//அலசுகிறேன் உங்கள் ஆதரவு உள்ளவரை அலசப் போகிறேன். இதை எழுதும் போது என் மனதில் இருபது அத்தியாயங்கள் தோன்றிவிட்டன//
பிரபஞ்ச நியதககளை பற்றி தொடர்ந்து எழுதுங்க
ஆர்வத்தோட காத்திருக்கிறேன்.